14.3.08

தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இந்தியா நடைமுறைப் படுத்த எத்தனிப்பது அறிவீனம்

தமிழீழ அரசியலில் காக்கை வன்னியன் ஆகவும், தொழுநோயாளி போலவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ்மக்களைக் கடத்திக் கொலை செய்துவரும் சிறிலங்கா துணை இராணுவக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவை இந்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் புதுடில்லியில் சந்தித்து 13ஆவது சட்ட திருத்தம் பற்றி ஆலோசனை நடத்தியதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் புறந்தள்ளி விட்டு தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட டக்லஸ் தேவானந்தாவை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முகமாக பா. சிதம்பரம் உட்பட மற்றவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது இந்தியா இன்னமும் வி.புலிகளுக்கு எதிராக ஒரு செயற்கையான (synthetic) தலைமையை உருவாக்கும் முயற்சியைக் கைவிட வில்லை என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகிறது.
  • டக்லஸ் தேவானந்தா தமிழ்நாடு காவல்துறையால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் ஒரு கொலைக் குற்றவாளி ஆவார். 1986 இல் சென்னை, சூளைமேட்டில் வைத்து அய்யாவு என்ற தலித் பட்டதாரியைச் சுட்டுக் கொலை செய்ததற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர். பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடப்பட்ட போது தமிழ்நாட்டைவிட்டு ஓடி இலங்கைக்கத் தப்பிச் சென்றவர். எனவே அவர் ஒரு தேடப்படும் கொலைக் குற்றவாளி ஆவார்.

  • பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் திவ்வியராசன் ஒக்தோபர் 19, 2000 இல் அவரது வீட்டில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திவ்வியராசனைக் கொலை செய்தவர்கள் இபிடிபி ஆயுத கூலிக் குழுவைச் சேர்ந்தவர்கள். அந்தக் கூலிக் குழுவைச் சேர்ந்த டேவிட மைக்கல் கொலின்ஸ் கைது செய்யப்பட்டான். ஆனால் அவன் டக்லஸ் தேவானந்தாவின் உதவியுடன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி இலண்டனுக்கு ஓடிவிட்டான். இவ்வாறான சாமுத்திரிகா இலட்சணம் படைதத ஒருவரோடுதான் இந்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் கைகுலுக்கி இனச் சிக்கல்பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
"சிறிலங்கா அரசியல் யாப்பின் 13 ஆம் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதனை வரவேற்கின்றோம் என்றும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு இந்தியா மேலதிகமாக உதவும்" என்ச் சிவசங்கர் மேனன் கூறியிருக்கிறார்.

"இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசத்துக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணபதில் பாரிய பங்களிப்பை இந்தியா செலுத்த உள்ளது" என்று எம்.கே.நாராயணன் கூறியதாக டக்ளஸ் தேவானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகற்கனவு கணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக இந்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், பாதுகாப்பு ஆலோசகர், எம்.கே. நாராயணன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோருக்கு உண்டு.

13 ஆவது சட்ட திருத்தச் சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த மிதவாதத் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட திருத்தமாகவும். அந்தத் திருத்தத்தின் கீழ் 1999 இல் மாகாணசபைககு நடத்தப்பட்ட தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது. அந்தச் சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்தத்தான் இந்தியா இப்போது ஒற்றைக் காலில் நிற்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மிதவாதத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இருபது ஆண்டுகள் கழித்து நடைமுறைப் படுத்த இந்தியா எத்தனிப்பது அறிவீனமாகும். அது வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிய கதை போன்றது. இந்த 20 ஆண்டு காலத்தில் விடுதலைக்குத் தமிழ் மக்கள் கொடுத்த விலை - பலி கொடுத்த உயிர்கள் - சிந்திய குருதி - மிக மிக அதிகமாகும்.

கடந்த காலத்தில் இராசீவ் விட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் இந்தியா செய்ய ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது என்பது எமக்கு விளங்கவில்லை. மத்திய காங்கிரசின் இந்த தமிழ் விரோதப் போக்குக்கு தமிழக முதல்வரும் காரணம் என நாம் நினைக்கிறோம்.

"இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எதுவோ அதுவே திமுக வின் வெளியுறவுக் கொள்கை" என்ற தமிழக முதல்வரின் குழந்தைத்தனமான அறிவிப்பின் வாயிலாக தனது குடுமியை அவர் திலலிக்குக் கொடுத்துவிட்டார்.

வி.புலிகளை ஓரங்கட்டிவிட்டு தமிழர்களுக்குள் இருக்கும் எட்டப்பர்களின் துணையோடு 13 ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு எத்தனிப்பது மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கினவன் கதையாகவே முடியும். இதனை உறைப்பாக இந்திய அரசுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

இந்தியா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது. [THE END]

No comments: